Home ஆன்மிகம் ஆடி மாத தரிசனம் 10: விக்ரமாதித்தன் வழிப்பட்ட காளி திருக்கோவில்! மூன்று கைகளுடன் காட்சி தரும்...

ஆடி மாத தரிசனம் 10: விக்ரமாதித்தன் வழிப்பட்ட காளி திருக்கோவில்! மூன்று கைகளுடன் காட்சி தரும் அம்பிகை!

0

ஆடி மாத தரிசனம் 10: விக்ரமாதித்தன் வழிப்பட்ட மாகாளி திருக்கோவில். தமிழகத்தில் ஒரு உஜ்ஜயினி மாகாளி திருக்கோவில். திருச்சி சமயபுரம் அருகே உள்ள மாகாளிக்குடி சிறப்புகள்.

பாரத தேசத்தில் அன்னை காளி தேவிக்கு பக்தர்கள் பலர் இருந்தனர் இருந்தும் வருகின்றனர். காளி ஞானத்தை வழங்கும் மகா சக்தி.

அவளை வழிபட்டால் ஞானம், கல்வி, செல்வம், வீரம் என அனைத்தும் கிடைக்கும் என்பது கண்கூடான உண்மை.

எண்ணற்ற மன்னர்கள் காளியை பூஜித்து அவள் அருளால் உலகயையே அடக்கி ஆண்டனர்.

அந்த வரிசையில் உஜ்ஜயினியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த மன்னன் விக்ரமாதித்யன் ஆவான். தமிழகத்தில் அவன் பிரதிட்டை செய்த காளியே மாகாளிக்குடி உஜ்ஜயினி காளி திருக்கோவில் ஆகும்.

உஜ்ஜயினி காளி வரலாறு

விக்ரமாதித்யன் நாடாறு மாதம் காடாறு மாதம் ஆண்டு வந்தான். அப்படி அவன் காடாறு மாதம் வரும் பொழுது தன் இஷ்ட தெய்வமான காளியை கூடவே கொண்டு சென்று பூஜைகள் செய்வான்.

ஒரு முறை அவன் காடாறு மாதம் வந்த பொழுது காவிரி கரையோரம் இருந்த இக்காட்டில் தங்கி காளியை வைத்து பூசித்து வந்தான்.

அவன் ஆறு மாதம் முடிந்து திரும்பும் வேளையில் காளி விக்ரகத்தை எடுக்க முயற்சி செய்தான் ஆனால் எடுக்க இயலவில்லை. தன்னுடன் வருமாறு மன்றாடினான்.

அன்னை காளி அவன் முன் தோன்றி தனது சக்தி இங்கேயே நிலைத்திருக்கும். இவ்விடத்திலேயே கோவில் அமைத்து வழிபடுமாறு கூறினாள்.

அதன் பின் இங்கேயே அம்பிகைக்கு சன்னதி அமைத்து வழிபட்டான் என்கிறது தல வரலாறு.

கோவிலின் சிறப்புகள்

அம்பிகை உஜ்ஜயினி மாகாளி தனி சன்னதி கொண்டு கற்ப கிரகத்தில் வீற்றிருக்கிறாள். இவளின் பெயராலே மாகாளிக்குடி என்ற திருநாமத்தில் இவ்விடம் அமைந்துள்ளது.

இங்கே ஆனந்த சௌபாக்கிய சுந்தரி என்ற திருநாமத்தில் அம்பிகை அருள்பாலிக்கிறாள். அர்த்தனாரி ரூபமாக அன்னை தாண்டவ கோலத்தில் அசுரனை வதைக்கும் கோலத்தில் உள்ளாள்.

வேறு எங்கும் இல்லாத வண்ணன் ஆனந்த சௌபாக்கிய சுந்தரி அம்பிகையின் வலது பாகம் அம்பிகையும் இடது பாகம் சிவனும் மாறி அமைந்துள்ளனர்.

மேலும் அம்பிகைக்கு மூன்று கைகள் மட்டுமே உள்ள ஒரே ஆலயம் இதுவே ஆகும். சூலம், கபாலம், தீச்சுவாலை தாங்கி ஆனந்த முகத்துடன் அன்னை காட்சி தருகிறாள்.

இங்கே விக்ரமாதித்யன் தம்பி களுவனுக்கும், வேதாளத்திற்கும் சிலைகள் உள்ளது. வேதாளத்திற்கு வேறு எங்கும் சிலைகள் கிடையாது.

இங்கே விநாயகர், சாஸ்தா, அலர்மேல் மங்கை, பிரசன்ன வெங்கடாசலபதி, இச்சாசக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி, விலங்குத்துறையான், சந்தான கோபால கிருஷ்ணன், சுப்ரமணியர், ஆஞ்சநேயர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளது.

விலங்குத்துறையானே சங்கிலி கருப்பர் ஆவார். இவரே இக்கோவிலின் க்ஷேத்ர பாலகராக அருள்புரிகிறார்.

ஏக கலசம் மட்டுமே அமைந்த அம்பிகை விமானம் சிவசக்தி ஐக்கிய தத்துவத்தை விளக்குகிறது.

ஞானத்தை அளிப்பாள் உஜ்ஜயினி மாகாளி!

காளியே ஞானத்தின் வடிவமாகவும் மோட்சத்தை வழங்கும் சக்தியாவாள்.
உஜ்ஜயினி மாகாளியை அருளால் தான் விக்ரமாதித்யன் வேதாளத்தின் கேள்விகளுக்கு பதில் கூறும் சக்தியை பெற்றான்.

தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு அனைத்து செல்வங்களையும் அளிக்கும் அன்னையே உஜ்ஜயினி மாகாளி.

அனைவரும் சமயபுரம் சென்றால் தவறாமல் அருகில் உள்ள உஜ்ஜயினி மாகாளியை சென்று தரிசித்து அவள் அருள் பெறுவோம்.

அமைவிடம்: உஜ்ஜயினி மாகாளி திருக்கோவில், மாகாளிக்குடி. திருச்சி சமயபுரத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது.

தரிசன நேரம் : காலை 6 – மதியம் 1 மணி வரை. மாலை 4 – 08.30 மணி வரை.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version