தயாரிப்பாளர் அவதாரம் எடுத்ததால் நடிப்பு முழுக்கு போட்ட சார்மி! காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சார்மி தற்போது இணை தயாரிப்பாளராக இருப்பதால், நடிப்புக்கு முழுக்கு போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை சார்மி நடிப்புக்கு முழுக்கு போட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
நீ தொடு காவாலி என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தவர் நடிகை சார்மி கவுர். இப்படத்தைத் தொடர்ந்து வந்த ஹிந்தி படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.
அதன் பிறகு 3 ஆவது படம் தமிழ் படமாக அமைந்தது. அதுவும் சிம்பு படம். ஆம், 2002 ஆம் ஆண்டு திரைக்கு வந்த காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தைத் தொடர்ந்து காதல் கிசு கிசு, ஆஹா எத்தனை அழகு ஆகிய இரண்டு தமிழ் படங்களில் நடித்தார்.
அதன் பிறகு வரிசையாக ஏராளமான தெலுங்கு படங்களில் மட்டும் நடித்தார். இடையிடையில் ஒரு சில மலையாள, கன்னட மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தார்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் சியான் விக்ரமின் 10 எண்றதுக்குள்ள. அதுவும், இந்தப் படத்தில் அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். இந்தப் படம் கடந்த 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது.
கடந்த 5 ஆண்டுகளாக சார்மி எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அண்மையில், தான் நடிப்பை விட்டு விலகுவதாக முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
படங்களில் நடிப்பதற்குப் பதிலாக, படங்கள் தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
ஆம், கடந்த 5 ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழும், பூரி ஜெகன்னாத் உடன் இணைந்து பல படங்களை தயாரித்துள்ளார்.
சார்மி, தனது ஜோதி லட்சுமி என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து பைசா வசூல், மெஹ்பூபா, ஐஸ்மார்ட் ஷங்கர், ரொமாண்டிக் ஆகிய படங்களுக்கு இணை தயாரிப்பாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், சார்மியின் அறிமுகமான காலத்தில் அறிமுகமான, நடிகைகள் இன்றும் சினிமாவில் நடித்து வரும் நிலையில், சார்மி மட்டும் சினிமாவில் இருந்து விலகுவது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.