Home சிறப்பு கட்டுரை ஆறு – நதி பெயர் வந்தது எப்படி? | river in tamil

ஆறு – நதி பெயர் வந்தது எப்படி? | river in tamil

328
1
ஆறு நதி river in tamil நீர்நிலைகள்

ஆறு என்றால் என்ன? நதி எப்படி உருவாகிறது? river in tamil மனித நாகரிகத்தின் முதல் பிறப்பிடம் ஆறு. ஆற்றங்கரை காட்டிய வழிகள் மூலமே மனிதன் பல இடங்களுக்கு குடி பெயர்ந்தான்.

ஆறு – அறு பொருள்

ஆறு (river) என்றால் தமிழில் வழி என்ற பொருள் உண்டு. அதனால் தண்ணீர் செல்லும் வழி என்பதால் ஆறு எனப் பெயர் வந்ததாக பல தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அது மட்டும் அப்பெயர் வரக்காரணம் அல்ல.

நிலப்பகுதியை இரண்டு துண்டாக அறுத்துக்கொண்டு செல்வதால் இதை அறு என்று அழைத்தனர். அறு என்றால் ஆறு என்று பொருள் உண்டு. அறுசுவை, அறுபொழுது என்ற வார்த்தைகள் இதற்கு சான்று. இப்படித்தான் பெயர் வந்தது.

நதி என்பது சமஸ்கிருதமா?

‘‘காவிரி தென்பெண்ணை, பாலாறு – தமிழ்

கண்டதோர் வைகை பொருனை நதி – என

மேவிய ஆறு பலவோடத் – திரு

மேனி செழித்து தமிழ்நாடு”

– பாரதியார் பாடல்

பாரதியார் வந்த பின்பு தமிழ் மொழியில் அதிகம் சமஸ்கிருதம், வடமொழி சொற்கள் புகுந்தன. அதை அவரே அவரது நூலில் குறிப்பிட்டும் உள்ளார்.

சங்க கால இலக்கியங்களில் நதி என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. ஆறு என்று தான் புலவர்கள் தங்கள் இயற்றிய பாடலில் குறிப்பிட்டு உள்ளனர்.

‘‘போலும் நான்முகனையும் பொன்னிமா நதி”
‘‘எம்பிரானை இறைஞ்சலின் ஈர்ம் பொன்னி
உம்பர் நாயகர்க்கு அன்பரும் ஒக்குமால்” (57)

– சேக்கிழார் பெரிய புராணம்

ஆனால், 12-ம் நூற்றாண்டுக்குப்பிறகு ஒட்டக்கூத்தர், சேக்கிழார் போன்ற புலவர்கள் நதி என்ற வார்த்தையை பயன்படுத்தி பாடல் இயற்றி உள்ளனர். பிற்கால இலக்கியங்களில் மட்டுமே நதி என்ற வார்த்தை உள்ளது.

“நதியாறு கடந்து நடந்துடனே” 

– கலிங்கத்துப்பரணி ஜெயங்கொண்டார்

நதியாறு என இரண்டு சொல்லையுமே ஜெயங்கொண்டார் பயன்படுத்தி பாடியுள்ளார். எனவே நதி + ஆறு என்பது ஓரே பொருள்தரும் சொல் அல்ல.

மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள் நதி என்றும்; கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பாயும் ஆறுகள் நதம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஆரம்பகாலத்தில் நதி என்பதை முழுவதும் ஆறுகளுடன் ஒப்பிடவில்லை. திசையை வைத்தே தமிழகத்தில் பாயும் ஆறுகளை நதிகள் என்று குறிப்பிட்டு உள்ளனர். காலப்போக்கில் நதி என்றால் ஆறு என்று மாறிப்போனது.

நதி என்ற சொல் சம்ஸ்கிருதம் மொழியிலும் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அங்கிருந்து தான் தமிழுக்கு வந்தது என்ற போதிய ஆதாரம் கிடைக்கவில்லை.

மேலும், நதி என்ற சொல் பிற்கால இலக்கியங்களிலேயே இடம்பெற்று உள்ளது. எனவே, இது தமிழுக்குச் சொந்தமான சொல் என்பதையும் உறுதிப்பட கூறமுடியவில்லை. வேறுசில மொழிகளிலும் இச்சொல் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆற்றங்கரை நீர்நிலை

ஆறு (river) எப்படி உருவாகிறது?

பொதுவாக ஆறுகள் மலைப்பகுதிகளில் உருவாகி தாழ்வான இடங்கள் வழியாக கடலில் சென்று கலக்கும். மழைப்பொழிவு, பனிக்கட்டிகள் கரைவது மூலம் ஆறு உருவாகும்.

ஆற்று நீர் என்பது மேல் பகுதியில் ஓடும் நீர் மட்டுமல்லாமல் நிலத்திற்குள் செல்லும் நீரோட்டத்தையும் சேர்த்தே கணக்கிடப்படுகிறது. நீரோட்டம் புவிஈர்ப்பு விசை மூலம் உருவாகிறது.

மலை மற்றும் மலைத்தொடர் பகுதிகளில் மழை பொழிவதன் மூலம் பள்ளங்கள் நிரம்பி அருவியாக கீழே கொட்டுகின்றன. அந்த தண்ணீர் நிலத்தை அறுத்துக்கொண்டு கடலில் கலக்கின்றது.

ஆற்றை, ஆற்றங்கரை பகுதில் இருந்து பரிசல், படகு, ஓடம் மூலம் மட்டுமே கடக்க முடியும். கால்களால் நடந்து செல்லும் அளவு மட்டுமே தண்ணீர் கொண்ட பகுதிகள் ஓடை என அழைக்கப்படுகிறது.

மழை மிகுதியால் ஓரிரு நாட்கள் மட்டுமே தண்ணீர் செல்லும் ஆறுகள் காட்டாறு என அழைக்கப்படுகிறது. அதேபோல், நீர் கடலில் கலப்பதற்கு முன்பே மண்ணால் உறிஞ்சப்பட்டுவிட்டால் அல்லது வற்றிவிட்டால் அது சிற்றாறு என அழைக்கப்படுகிறது.

நீர்நிலை பெயர்கள்

சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பது இயற்கையாக தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். ‘குட்டை’ என்பது மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளிப்பதற்குப் பயன்படும் நீர்நிலை ‘குளம்’.

ஊரார் உண்பதற்கும் குடிநீருக்கும் பயன்படுத்தும் நீர்நிலை ‘ஊருணி’. ஏர்த் தொழிலுக்குப் பயன்படுவது ‘ஏரி’. மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நீர்நிலை ‘ஏந்தல்’. கண்ணாறுகளை உடையது ‘கண்மாய் ‘ என்றும் அழைக்கப்படுகிறது.

இது மட்டும் இல்லாமல் இன்னும் நிறைய நீர்நிலை பெயர்களும் உள்ளது. உலகின் மிக நீளமான ஆறுகள்

Previous articleசெல்வ மழை பொழிய வைக்கும் ஐஸ்வர்ய லட்சுமி திருக்கோவில்
Next articleஉலகின் மிகப்பெரிய தீவு எது? | டப் 10 பட்டியல்
Editor in Chief & Founder of MrPuyal.com

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here