தனது தொண்டு நிறுவனத்தின் 15 ஆவது ஆண்டின் தொடக்கத்தில் அடியெடுத்து வைத்துள்ள ராகவா லாரன்ஸின் முதல் முயற்சியாக திருநங்கைகளுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்திற்கு நடிகர் அக்ஷய் குமார் ரூ.1.5 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், இலவசமாக கல்வி, மருத்துவ உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கு நடனம், பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதானவர்கள் என்று பலருக்கும் உதவும் வகையில், தனது பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் எத்தனையோ பேர் பயனடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்ட 15 ஆண்டுகள் ஆன நிலையில், இதனை சிறப்பிக்கும் வகையில், பல புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளார். அதாவது, இந்த 15 ஆவது ஆண்டின் தொடக்கம் முதல் திருநங்கைகளுக்கு என்று வீடு கட்டித்தர திட்டமிட்டுள்ளார். இதற்காக நிலம் வழங்கப்பட்டு, நிதியுதவி பெறப்பட்டு அதன் மூலம் வீடு கட்டவும் திட்டமிட்டுள்ளார்.
இதன் காரணமாக, பாலிவுட்டில் உருவாகி வரும் லக்ஷ்மி பாம் படத்தின் படப்பிடிப்பின் போது அக்ஷய் குமாரிடம் இது குறித்து அவர் பேசியுள்ளார். இதையடுத்து, உடனடியாக, மேற்கொண்டு என்ன ஏது என்று எதுவும் கேட்காமல், ரூ.1.5 கோடியை நிதியுதவி அளித்துள்ளார்.
யாரெல்லாம், நிதியுதவி அளிக்கிறார்களோ அவர்கள் எல்லாம் எங்களுக்கு கடவுள்தான். அந்த வகையில், எங்கள் எல்லோருக்கும் அக்ஷய் குமார் கடவுள்தான். அவரது இந்த உதவிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், இதன் மூலம் இனி இந்தியா முழுவதும் உள்ள திருநங்கைகளுக்கும் வீடு கட்டித்தரப்படும் என்று தெரிவித்துள்ளார். திருநங்கைகளுக்கு என்று வீடு கட்டும் முயற்சியின் முதல் பகுதியான பூமி பூஜை குறித்த தேதி விரைவில், அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் காஞ்சனா 3. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, காஞ்சனா 3 படத்தின் ரீமேக்கில் அக்ஷய் குமார் நடிப்பதாகவும், ராகவா லாரன்ஸ் இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு லக்ஷ்மி பாம் என்றும் டைட்டில் வைக்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதற்கிடையில், அக்ஷய் குமாருக்கும், ராகவா லாரன்ஸுக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமா பிரச்சனை எழுந்தது. இதன் காரணமாக லக்ஷ்மி பாப் படத்திலிருந்து ராகவா லாரன்ஸ் விலகுவதாக தகவல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது.