தந்தையை வெட்டிக்கொன்ற மகன் தங்கையை கொன்றார் அண்ணன்; டாஸ்மார்க் ஸ்டோரிஸ். தாய், மகள் தீக்குளிப்பு மதுரை என கலவர பூமியாக மாறிய தமிழ்நாடு. மதுக்கடைகள் தான் காரணமா?
தங்கை கொலை விருதுநகர்
திருச்சுழி அருகே கீழகண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டி (60). இவரது மனைவி சந்திரமதி (55). இவர்களுக்கு 3 மகள்களும் , கணேஷ்பாபு (23) என்ற மகனும் உள்ளனர்.
கடைசி மகளான அம்சவல்லி ராஜபாளையத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். கணேஷ்பாபு லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார்.
அம்சவல்லியும், அதே ஊரைச் சேர்ந்த முருகேசபாண்டியனும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க இரு குடும்பத்தினரும் முடிவு செய்தனர். இதற்கு கணேஷ்பாபு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
நேற்று மதுக்கடை திறந்ததும், கணேஷ்பாபு மது அருந்தி விட்டு முழு போதையில் வீடு திரும்பினார். தங்கை அம்சவல்லியிடம் காதல் விவகாரம் பற்றி பேசி தகராறில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றியதில் கட்டையால் கொடூரமாக தாக்கியதில் அம்சவல்லி பரிதாபமாக உயிரிழந்தார். கதப்பி ஓடிய கணேஷ்பாபுவை திருச்சுழி போலீசார் தேடி வருகின்றனர்.
தந்தை கொலை விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூர் அம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணபெருமாள் (80).
இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். 4வது மகன் குருவையா (45) வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
இவரது மனைவி குருபாக்கியம், இரண்டு குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார். குருவையாவுக்கும், தந்தை லட்சுமணபெருமாளுக்கும் சொத்து பிரச்னையில் தகராறு இருந்து வந்தது.
நேற்று மாலை டாஸ்மாக் கடைக்கு சென்று போதையில் திரும்பிய குருவையா வீட்டின் முன் அமர்ந்திருந்த லட்சுமணபெருமாளிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
இதில் அவர் உயிரிழந்தார். சேத்தூர்போலீசார் குருவையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய், மகள் தீக்குளிப்பு மதுரை
மதுரை அருகே அலங்காநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (40). கட்டிடத் தொழிலாளி. சிவகுமார் காலையில் கடுமையாக குடித்து விட்டு, கடும் போதைக்கு ஆளானார்.
வீட்டுக்கு வந்த சிவகுமார், மனைவி பரமேஸ்வரியை (37) அடித்து உதைத்தார். தடுத்த மகள் அர்ச்சனாவையும் (18) தாக்கினார்.
மனமுடைந்த பரமேஸ்வரி, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு, ‘மதுவை விடாவிட்டால் தீக்குளிப்பேன்’ என்று மிரட்டினார்.
தொடர்ந்து அவர் தகராறு செய்ததால் மகள் அர்ச்சனா, மீதி இருந்த எண்ணெயை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதை சற்றும் எதிர்பாராத பரமேஸ்வரியும், தாவி மகளை பிடிக்க,அவர் மீதும் தீ பரவியது. தீயில் கருகிய 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
80 சதவீதத்திற்கும் மேல் கருகிய நிலையில், அர்ச்சனாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.