Home ஆன்மிகம் தைப்பூச விழா எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

தைப்பூச விழா எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

644
1
தமிழ் கடவுள் முருகன் தைப்பூசம்

தைப்பூச விழா எவ்வாறு கொண்டாடப்படுகிறது? தைப்பூசத்தின் சிறப்பு என்ன? தைப்பூசம் எங்கு பிரபலமாக கொண்டாப்படுகிறது? தமிழ் கடவுள் முருகன் தை பூசம்.

தைப்பூசத்தின் சிறப்பு

உத்தராயண புண்ணிய காலத்தின் ஆரம்ப மாதமாகிய தை மாதத்தில் எண்ணற்ற விழாக்களும் விரதங்களும் அமையப்பெற்றுள்ளன. இதிலிருந்தே தை மாதம் எவ்வளவு சிறப்புமிக்க மாதம் என்பதை அறியலாம்.

அந்த வகையில் தை மாதத்தில் 27 நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரமாக விளங்கக்கூடய பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியுடன் கூடிய சுப தினமே “தைப்பூச திருநாள்” ஆகும்.

இது தமிழ் கடவுள் முருகன் அவர்களுக்கு உகந்த தினமாகும்.

தைப்பூசத்தின் சிறப்பு

தைப்பூசத்தின் சிறப்பு

உலகம் தோன்றியது இந்த தைப்பூச தினத்தில் தான் என்று கூறப்படுகிறது.

சக்தியின் அம்சமான சந்திரன் தைப்பூசத்தன்று கடகராசியில் ஆட்சி பலத்தோடு சஞ்சரிக்கின்றார். அதேபோல் மகரத்தில் சிவ அம்சமான சூரியன் இருப்பார்.

இருவரும் ஒருவருக்கொருவர் முழு பலத்தோடு பார்த்துக்கொள்வர். எனவே தைப் பூசமானது மிக சிறப்புமிக்க தினமாக திகழ்கிறது.

திருவாதிரையில் தனித்து நடம் புரியும் சிவப்பெருமான் தைப்பூசத்தில் சக்தியுடன் இணைந்து ஆனந்த நடனம் புரிவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் தொன்று தொட்டு தைப்பூச விழாவானது கொண்டாடப்படுகிறது. குறிப்பாக முருகனுக்கு அன்றைய தினத்தில் விழா நடத்துகிறார்கள்.

தைப்பூசத்தில் அறுபடை வீடுகள் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் உள்ள முருகன் கோவில்களிலும் விழா நடைப்பெறுகிறது.

பழனி தைப்பூச விழா

தைப்பூச விழா தமிழ் கடவுள் முருகன்

திருவாவினன்குடி என்று கூறப்படுகின்ற பழனியில் பத்து நாட்கள் தைப்பூச விழாவானது விமர்சியாக கொண்டாடப்படுகிறது.

தினமும் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் நான்கு ரத வீதியில் வளம் வருவார்.

முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாள் தேரோட்டமும், 10 ஆம் நாள் தெப்போற்சவமும் நடைபெறும்.
இந்த பத்து தினங்களும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நடைப்பயணமாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் குவிவர்.

பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, வேல் காவடி, பறவை காவடி, மச்ச காவடி, புஷ்ப காவடி, தீர்த்த காவடி என காவடிகள் வரிசை வரிசையாக வந்த வண்ணம் இருக்கும்.

பூசம் குருவிற்கு உரிதான நட்சத்திரம் ஆகும். இந்நாளில் சிவனிற்கே குருவான ஆதி குரு குமரப் பெருமானை வணங்கினால் சகல சம்பத்தும் கிடைக்கும்.

வடலூரில் தைப்பூச விழா

தைப்பூச விழா

வடலூரில் வள்ளலார் அமைத்த சத்திய ஞான சபையில் தைப்பூசதன்று ஏழு திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இதை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவர்.

மற்ற மாதப் பூச தினத்தன்று ஆறு திரைகள் மட்டுமே விலக்கப்படும். தைப்பூசத்திற்கு அடுத்த நாள் புனர்பூசதன்று தான் வள்ளலார் அருட்பெருஞ்சோதியுடன் இரண்டறக் கலந்தார்.

அன்றைய தினத்தில் வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுகுப்பத்தில் வள்ளலார் திருகாப்பிட்டு கொண்ட அறையானது சன்னல் வழியாக காண்பிக்கப்படும்.

சமயபுரத்தில் தைப்பூச விழா

தைப்பூசத்தின் சிறப்பு தைப்பூசம்

சக்தி திருத்தலமான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 11 நாட்கள் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவங்கி வெகு சிறப்பாக நடக்கும்.

முக்கிய நிகழ்வாக தைப்பூசத்தன்று சமயபுர மாரியம்மனின் அண்ணான ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் தங்கையான மாரியம்மனிற்கு சீர் வழங்கும் வைபவம் வெகு விமர்சியாக கொள்ளிடக் கரையில் நடைபெறும்.

 

அயல்நாடுகளில் தைப்பூச விழா

தமிழ் கடவுள் முருகன் தைப்பூசம்

தைப்பூசமானது இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மொரீசியஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள முருகன் கோவில்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மலேசியா பத்து மலை முருகன் கோயிலில் வெகு விமர்சியாக தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. விதவிதமான அலகு குத்தியும், காவடி எடுத்தும் மலேசிய மக்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்துகின்றனர்.

2020-இல் தைப்பூசம்

இந்த ஆண்டு தைப்பூசமானது பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி சனிக்கிழமை வருகின்றது.

இந்நாளில் நாமும் விரதமிருந்து முருகப் பெருமானை திருக்கோயில்கள் சென்று வணங்கி எல்லா வளங்களும் பெற்று இன்புற்று வாழ்வோம்.

Previous article7/2/2020 ராசிபலன்: தின ராசிபலன் – Horoscope Tamil
Next articleலோக்சபா அமளி: ஹர்ஷ்வர்தன் – மாணிக்கம் தாகூர் மோதல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here