Home சினிமா கோலிவுட் சைக்கோ பாடல் வரிகள் எனக்குள் ஏற்படுத்திய மாற்றம்

சைக்கோ பாடல் வரிகள் எனக்குள் ஏற்படுத்திய மாற்றம்

784
0
இசைஞானி இளையராஜா இசையில் சைக்கோ பாடல் வரிகள்

சைக்கோ பாடல் வரிகள் எனக்குள் ஏற்படுத்திய மாற்றம். இசைஞானி இளையராஜா இசையில் வெளிவந்த சைக்கோ பட பாடல்களை பற்றிய சிறுகுறிப்பு.

மிஷ்கின் அவர்கள்  இயக்க உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதரி மற்றும் இயக்குனர் ராம் போன்றோர்கள் நடித்திருக்கும் சைக்கோ திரைப்படம் வருகிற ஜனவரி 24ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்திற்கு நம்மின் இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.

செவிக்கு வெறும் இனிமையாக மட்டுமல்லாமல் ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு உணர்வை கேட்பவருக்கு கடத்துகிறது.

இளையராஜாவும் மிஷ்கினும்

மிஷ்கின் தன்னுடைய இண்டர்வியூக்களிலும், பிற நிகழ்ச்சிகளிலும் இளையராஜா என்பவர் அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், அவர் பாடல்களை பற்றியும் சிலாகித்து பேசியிருப்பதையும் பேசிக்கொண்டிருப்பதையும் நாம் இப்பொழுதும் பார்க்கலாம்.

ஏற்கனவே நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியுமென இரு திரைப்படங்கள் இளையராஜாவுடன் இணைந்து  மிஷ்கின் பணியாற்றியிருக்கிறார்.

“எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் இளையராஜா என் கடவுள்”

என்றெல்லாம் கூட சொல்லியிருக்கிறார்.

மிஷ்கின் இளையராஜாவை காதலிக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு இளையராஜாவின் இசைப்பிரியர் மிஷ்கின்.

இந்த பக்தன், தன் கடவுளுடன் இணைந்து  ரசிகர்களுக்கு கொடுத்திருக்கும் இசைப்படையல் தான், சைக்கோ படத்தில் இதுவரை வெளிவந்திருக்கும் மூன்று பாடல்களும்!

உன்ன நெனச்சி நெனச்சி..  பாடல் வரி

இப்பாடலின் வரிகளை கவிஞர் கபிலன் எழுத சித் ஶ்ரீராம் பாடியுள்ளார். மிகவும் எளிமையான வரிகளை கொண்டுள்ளது இப்பாடல்.

கண் தெரியாத ஒருவன் தன் காதலுக்காக ஏங்கும் பாடலாக உள்ளது இப்பாடல். இளையராஜா மென்மையாக இசைக்க முதன்முறையாக சித்ஶ்ரீராம்  இப்பாடலுக்காக தன் குரலை வேறுவிதமாக பயன்படுத்தியுள்ளார் .

கண்தெரியாத ஒருவனுக்கு வாசனைகளும், ஓசைகளும்தான் அடிப்படையாக புரியக்கூடியவை. அவற்றை வைத்துதான் அவன் வேறுபாடுகளை, இவ்வுலகத்தை புரிய முயற்ச்சிப்பான் .

அவன் உறவாக கருதக்கூடியது வாசமும் , ஓசையும் மட்டும்தான் அதுமட்டுமல்ல அவர்களுக்கு எப்போதும் இருள்மட்டும்தானே காட்சியளிக்கும் . இதை இப்பாடலில்

வாசம் , ஓசை இவைதானே எந்தன் உறவே ..
உலகின் நீண்ட இரவென்றால் அது எந்தன் இரவே !
இவ்வாறாக கூறியிருப்பார் கபிலன் .

மேலே குறிப்பிட்ட வரிகள் மட்டுமல்ல பாடலில் உள்ள மற்ற வரிகளும் எளிமையாக நம்மில் வலியை உணர வைக்கும் .

நீங்க முடியுமா… பாடல் வரி

நீங்க முடியுமா என்று தொடங்கும் இப்பாடலையும் சித்ஶ்ரீராமே பாடியுளள்ளார். கபிலன் அவர்கள் இப்பாடலுக்கும் வரிகள் எழுதியுள்ளார். இளையராஜா தனது இசையால் மீண்டும் நம்மை உணர வைத்து அழுக வைக்கிறார்.

கண் தெரியாதவர்கள் உபயோகிக்கும் blind stick-ஐ மூன்றாவது கால் எனவும், பார்வையில்லாததால் இருக்கும் ஒரு இருளையும், பகலிற்கு பிறகு வரும் ஒரு இரவையும் சேர்த்து இரு இரவு என்கிறார் கவிஞர்.

மேலும் அந்த இரு இரவுகளுக்குமே ஒரே நிலவு அவன் காதலியென்கிறார் அதை கீழ்க்கண்ட வரிகள் மூலம் கூறுகிறார்.

மூன்று காலில் காதல்
தேடி நடந்து போகிறேன்..
இரண்டு இரவு
இருந்தபோதும்
நிலவை கேட்கிறேன் ..

தன் காதலியை தேடிக்கொண்டிருக்கும் ஒருவன்

“உயிர்ப்போகும் நாள்வரை உனை தேடுவேன் ,
 உனை  மீண்டும் பார்த்தப்பின் கண்மூடுவேன்…”

எனச்சொல்வதெல்லாம் பெருங்காதல். அதை இசையால் ராஜாவும்
குரலால் சித்ஶ்ரீராமும் கேட்பவர்களுக்கு மென்மையாக உணர்த்தியுருப்பார்கள்.

தாய்மடியில் .. பாடல் வரி

சில நாட்களுக்கு  முன்னரே வெளியானது தாய்மடியில் எனத்தொடங்கும் இப்பாடல் . கைலேஷ் என்பவர் இப்பாடலை பாடியுள்ளார்.

இந்த தாய்மடியில் பாடல் தாலாட்டு பாடலாக உள்ளது. அம்மா மகனுக்காக பாடும் தாலாட்டல்ல, மகன் அம்மாவுக்காகவோ அம்மாவாக நினைக்கும் உயிருக்காகவோ
ஏங்கி பாடும் தாலாட்டு வகையைச்சார்ந்தது.

ஏற்கனவே இளையராஜா அவர்கள் தன்னிசையால் பெரும்மக்களுக்கு  தாலாட்டு பாடுகிறார். ஆனால் இதுவோ  தாலாட்டு பாடலாகவே அமைந்திருக்கிறது .

” சோகம் தாங்கி பாரம் இறக்க யாரும் இல்லையே..
தாகம் தீர்க்க சுணையாய் இங்கு கருணை இல்லையே . “

மேலே உள்ள  பாடல் வரிகள் யாருமற்ற தனிமையின் வலியை உணர்த்துகிறது. சோகங்களும் ரணங்களும் நிரம்பியிருக்கும் இவ்வாழ்வில் மகிழ்வே இல்லாதவர்களுக்கும் உயிரிடம் அன்பை காட்ட யாருமில்லை என்பதெல்லாம் எவ்வளவு கொடுமையான விஷயம்..?

இத்தகைய தனிமையை வரிகளில் நிரப்பியிருக்கிறார் பாடலாசிரியர் மிஷ்கின். ஆம் ! தாய்மடியில் பாடல்வரிகளுக்கு சொந்தக்காரர் மிஷ்கின் அவர்களே.

சைக்கோ  படத்தில் இதுவரை வெளிவந்த மூன்று பாடல்களுமே வலி, காதல், ஏக்கம் என ஒலிக்கிறது. அதே சமயம் ஆறுதல் ஒலியையும் தந்து மனம் தேற்றுகிறது.

Previous articleதூய தேன் தொண்டையில் எரிச்சலை உண்டாக்கும் ஏன்?
Next article#UnrivledTamilActors: தெறிக்க விடும் தல-தளபதி ரசிகர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here