Home ஆன்மிகம் சந்தோஷி வழிபாடு: விநாயகருக்கு மகள் உள்ளாரா? யார் அவரின் மகள்? எப்படி அவரை பூஜிப்பது?

சந்தோஷி வழிபாடு: விநாயகருக்கு மகள் உள்ளாரா? யார் அவரின் மகள்? எப்படி அவரை பூஜிப்பது?

385
0

சந்தோஷி வழிபாடு : விநாயகருக்கு பிறந்த மகள் கதை. கன்னிகள் வெள்ளிக்கிழமை விரதமிருந்தால் திருமணம் நடக்கும். சந்தோசம் வழங்கும் சந்தோஷி மாதா வழிபாடு.

மூல முதற்பொருளாக விளங்குகின்ற விநாயகர் வழிபாடு இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ளது. நமது தமிழகத்தில் பெரும்பாலும் அவரை பிரம்மச்சாரியகவே வழிபடுகின்றனர்.

ஆனால் இந்தியாவின் வட மாநிலங்களில் அவர் குடும்பத்துடன் காட்சி தருகிறார். சித்தி, புத்தி என்ற இரு மனைவிகளும். சுபம், லாபம் என்ற இரண்டு மகன்களும் அவருக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி தம்பதி சமேதராக குடும்பத்துடன் உள்ள காட்சி தரும் விநாயகப் பெருமானிற்கு மகளும் உண்டு. இதனை பற்றி நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அண்டம் முழுதும் தனது பேழை வயிற்றில் அடக்கிய கண நாதனின் மகளே “சந்தோஷி மாதா” ஆவாள்.

சந்தோஷி மாதா பிறப்பு

ஒருமுறை விநாயகர் தனது மனைவி மற்றும் மகன்களுடன் பூமிக்கு வந்திருந்தார். அந்த நாள் பாரத தேசம் முழுதும் ரக்‌ஷா பந்தன் என்கிற விழா கொண்டாடப்பட்டு வந்தது.

அப்போது அனைத்து சகோதரிகளும் தம் சகோதரனுக்கு கயிறு கட்டி, பரிசுகளை பரிமாறி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனை கண்டு சுப தேவன் மற்றும் லாப தேவனுக்கு தமக்கும் சகோதரி வேண்டும் என்ற எண்ணம் தோன்றி தனது தந்தையிடம் வேண்டினர். மகன்களின் வேண்டுதலை ஏற்று விநாயகர் ஒரு மகளை பிறக்கச் செய்தார்.

துர்கா, லட்சுமி, சரஸ்வதியின் குணங்கள் ஒரு சேர பெற்ற மகளை தோற்றுவித்தார். அவளே சந்தோஷி மாதா ஆவாள். அனைவரின் கவலைகளை போக்கி மகிழ்ச்சியை வழங்கும் அம்பிகை ஆதலால் சந்தோஷி என்ற நாமம் கொண்டாள்.

நான்கு கரங்களை உடையவள். வலது மேற்கரத்தில் வாளும் கீழ்கரத்தில் அபயமும் தாங்கி, இடது மேற் கரத்தில் சூலமும் கீழ் கரத்தில் பொற்கிண்ணம் தாங்கியவள்.

பூர்ண சந்திரனை போல் ஒளி பிரகாசமான திருமுகத்தை கொண்டு பத்மாசனத்தில் அமர்ந்தவள். இவளை வழிபடுவதால் விநாயகரையும் சேர்த்து பூஜிக்கும் பலன் கிடைக்கும்.

சந்தோஷி மாதா விரதம்

வட மாநிலத்தில் பல இடங்களில் அன்னைக்கு ஆலயம் உண்டு. மேலும் திருமணம் வேண்டி கன்னி பெண்கள் விரதமிருந்து இவளை பூஜிக்கின்றனர். 11 வெள்ளிக்கிழமைகள் விரமிருந்து வழிபட வேண்டும். விரத நாட்களில் புளிப்பு உண்ணக்கூடாது.

விரத முடிவில் 8 ஆண் பிள்ளைகளுக்கு விருந்து வைக்க வேண்டும். விருந்தில் புளிப்பான ஆகாரம் இருக்க கூடாது. பணமாக தட்சணை அளிக்க கூடாது. காரணம் அந்த பணத்தில் குறிப்பாக அவர்கள் எதுவும் வாங்கி உண்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த வழிமுறை ஆகும்.

சந்தோஷி மாதாவிற்கு பிடித்தமான நைவேத்தியங்கள் படைக்க வேண்டும். கொண்டைக்கடலை, பூரி, வெல்லம், அப்பம், போலி முதலான இனிப்பு பதார்த்தங்கள் வைக்கலாம். புளிப்பான நைவேத்தியம் கூடாது.

இவ்வாறு வெள்ளிக்கிழமை விரதம் இருக்கும் பெண்களுக்கு நல்ல கணவன் கிடைப்பான், சீக்கிரமே திருமணம் கைக்கூடும் என்பது உண்மை ஆகும்.

தமிழகத்தில் சந்தோஷி மாதா ஆலயம்

அனைத்து துன்பங்களையும் நீக்கி சுக போக வாழ்வு அளிப்பவள் சந்தோஷி மாதா ஆவாள்.
தமிழகத்தில் சில விநாயகர் ஆலயத்தில் இவளுக்கு தனி சன்னதி உண்டு.

சென்னை விருகம்பாக்கம், கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் சந்தோஷி மாதா ஆலயம் அமைந்துள்ளது.

இவ்வன்னைக்கு உகந்த நாட்கள் வெள்ளிக்கிழமை, சதுர்த்தி தினங்கள், ரக்‌ஷா பந்தன், நவராத்திரி போன்ற நாட்கள் ஆகும். பெரும்பாலான சந்தோஷி மாதா ஆலயத்தில் வெள்ளிக்கிழமை ஆண்கள் தரிசிக்க தடை ஆகும். மற்ற நாட்களில் தரிசனம் செய்யலாம்.

சந்தோஷங்களை வாரி வழங்குவாள் சந்தோஷி!

இல்லற வாழ்வில் எண்ணற்ற பிரச்சனைகளும், பிணிகளும் நம்மை வாட்டி வதைக்கின்றன. இதனை போக்கி மகிழ்ச்சி பெற வைப்பாள் மாதா சந்தோஷி.

அனைவரும் வீட்டில் சந்தோஷி மாதா படத்திற்கு வெள்ளிக் கிழமைகளில் மலர் சாற்றி விளக்கேற்றி பூஜித்தாள் இப்பிறவியில் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கி சந்தோஷ வாழ்வு பெறலாம்.

Previous articleஜம்மூ காஷ்மீர்: பாதுகாப்பு படையினரால் இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொலை
Next articleபாகிஸ்தான்: பிரபல முன்னாள் கிரிகெட் வீரர் சாகித் அஃப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here