Nayanthara, Womens Day Celebration; மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த பெண்கள் பாதுகாப்பு பேரணியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நயன்தாரா பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா (Nayanthara). இவர், விஜய், அஜித், ஆர்யா, உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
இவரது நடிப்பில் அண்மையில் வெளியான படம் தர்பார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் அம்மனாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலானது.
உலகம் முழுவதும் மகளிர் தினம் (International Womens Day 2020) இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பெண்கள் அனைவருக்கும் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து சென்னையில் பெண்கள் பாதுகாப்பு பேரணியை நடத்தினர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நயன்தாரா, பெண்கள் பாதுகாப்பு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கப்பட்ட இந்த பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கப்பட்ட இந்த பேரணி நுங்கம்பாக்கம் பகுதியில் நிறைவடைந்தது.