Home Latest News Tamil வசந்த பஞ்சமி: சரஸ்வதி பூஜை ஏன் செய்ய வேண்டும்?

வசந்த பஞ்சமி: சரஸ்வதி பூஜை ஏன் செய்ய வேண்டும்?

0
589
saraswati puja 2021 mantra vasant panchami

வசந்த பஞ்சமி என்றால் என்ன? சரஸ்வதி பூஜை ஏன் இன்று செய்ய வேண்டும்? Vasant Panchami saraswati puja 2021 muhurta and saraswathi pujai mantra.

வசந்த பஞ்சமி என்றால் என்ன?வசந்த பஞ்சமி எனப்படுவது தை மாதத்தில் அமாவாசை முடிந்து வரும் வளர்பிறை பஞ்சமி திதியே வசந்த பஞ்சமி எனப்படுகிறது.

வசந்த பஞ்சமியானது வட மாநிலங்களில் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இதனை கொண்டாடுகின்றனர்.

வசந்த காலமே “அனைத்து காலங்களின் ராஜா” (King of all seasons) எனப்படுகிறது.

வடமாநிலங்களில் இந்த நாளை ஹோலி பண்டிகையை வரவேற்கும் விதமாக கொண்டாடுகின்றனர். வசந்த பஞ்சமியிலிருந்து நாற்பதாம் நாள் ஹோலி பண்டிகை வரும்.

வசந்த பஞ்சமியன்று வானில் பட்டங்களை விட்டு விளையாடி வசந்த காலத்தை வடக்கே உள்ள நகரங்களில் வரவேற்கின்றனர்.

டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், திரிபுரா, அசாம், வங்காளம், சிக்கிம், பஞ்சாப், மகாராட்டிரா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், சட்டிஸ்கர், பீகார் போன்ற மாநிலங்களில் வசந்த பஞ்சமி கொண்டாடுகின்றனர்.

தென்னகத்தில் ஆந்திராவில் ஸ்ரீ பஞ்சமி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். நேபாளம், மேற்கு வங்கம், இந்தோனேசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுகின்றனர்.

சரஸ்வதி ஜெயந்தி விழா

saraswathi pujai manthiram saraswati puja 2020 mantra

பிரம்ம பத்தினி என்று சொல்லப்படுகின்ற முப்பெரும் தேவியருள் ஒருவரான சரஸ்வதி தேவி அவதரித்த நாளே மகர மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமி திதி ஆகும். இதனை “வசந்த பஞ்சமி” மற்றும் “சரஸ்வதி ஜெயந்தி” விழாவாக கொண்டாடுகின்றனர்.

வாக் தேவி என்று சொல்லப்படுகின்ற சரஸ்வதி தேவி வாக்கு வன்மை, கல்வி, கலை, ஞானம், அறிவு, புத்தி கூர்மை, நல்லொழுக்கம், ஆளுமை ஆகிய அனைத்திற்கும் அதிதேவதை ஆவாள். இவளை வணங்குவதால் அஞ்ஞானம் நீங்கி மெய்ஞானம் வளரும்.

சரஸ்வதி தேவியின் தோற்றம்

saraswati puja 2020 mantra saraswathi pujai manthiram vasant panjami

சரஸ்வதி தூய்மையே வடிவானவள். வெந்நிற ஆடை உடுத்தி, வெள்ளை தாமரையில் அமர்திருப்பவள், கையில் ஞானத்தின் அம்சமாக வீணை, ஜெப மாலை, ஏட்டு சுவடி வைத்திருப்பவள். இவரின் வாகனம் அன்ன பறவை ஆகும்.

முப்பெரும் தேவியருள் முதன்மை ஆனவள் இவளே. பிரம்மனின் மனைவியானவள். இவளே சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி ஸ்வரூபமாக விளங்குகிறாள்.

சதா சர்வ காலமும் பிரம்மா இவள் மீட்டும் வீணை ஓசையைக் கேட்டு கொண்ட தன்னுடைய ஸ்ருஷ்டி தொழிலை செய்து வருகிறார். பிரம்மா சரஸ்வதிக்கு தமது நாவில் இடம் அளித்துள்ளார் என சொல்லப்படுகிறது.

சரஸ்வதியின் வேறுப் பெயர்கள்

வாக்தேவி, பாரதி, கலை செல்வி, ஞானவாகினி, கலைமகள், பிராஹ்மி, காயத்ரி, சாரதா, பூரவாகினி, சாவித்ரி, சகலகலாவல்லி, இசை மடந்தை, பாமகள், நாமகள், பனுவலாட்டி, வாணி, வேதா, கலைவாணி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர்.

சரஸ்வதி இந்து மதம் மட்டுமன்றி புத்தம் மற்றும் சமண மதங்களில் பூஜிக்கப்படுகிறார்.

புத்த சமயத்தில் மகா சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி, வஜ்ர வீணா சரஸ்வதி, வஜ்ர சாரதா, ஆர்ய சரஸ்வதி என்று ஐந்து பெயர்களில் பூஜிக்கப்படுகிறார்.

சமண சமயத்தில் ஸ்ருதி தேவி, வாக் தேவி, ஜின வாணி, ஜின ஐஸ்வர்யா என்ற பெயர்களில் பூஜிக்கின்றனர்.

வசந்த பஞ்சமியில் சரஸ்வதி பூஜை

வட மாநிலங்களில் வசந்த பஞ்சமியானது சரஸ்வதி பூஜையாக கொண்டாடுகின்றனர். மஞ்சள் சரஸ்வதிக்கு உகந்த நிறமாக கருதி மஞ்சள் நிற ஆடை, மஞ்சள் நிற பழங்கள், மஞ்சள் நிற மலர்கள், மஞ்சள் நிற சாதங்கள், மஞ்சள் நிற இனிப்பு வகைகளை சரஸ்வதிக்கு சமர்பித்து பூஜைகள் செய்கின்றனர்.

குழந்தைகளுக்கு அட்சராபியாசம், வித்யாரம்பம் முதலியவை இந்நாளில் செய்கின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்கின்றனர்.

வீட்டில் சரஸ்வதி பூஜை 

சரஸ்வதி பூஜை

வசந்த பஞ்சமி நாளில் வீட்டில் அதிகாலை நீராடி, மஞ்சள் நிற ஆடை உடுத்தி சரஸ்வதி படம் அல்லது சிலைக்கு வெள்ளை மற்றும் மஞ்சள் நிற மலர்கள் சாற்றி வழிபட வேண்டும்.

குழந்தைகள் அனைவரும் புத்தகங்களை வைத்து பூஜித்து பின் வரும் ஸ்லோகத்தை சொல்லலாம்.

“சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா”

“ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை – தூய உருப் பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பாள் இங்கு வாரா திடர்”

இந்த ஸ்லோகங்களை சொல்லி வழிபடலாம். சரஸ்வதி அந்தாதி மற்றும் சகலகலாவல்லி மாலை பாராயணம் செய்யலாம்.

2021-இல் வசந்த பஞ்சமி

இந்த ஆண்டு பிப்ரவரி  மாதம் 16-ஆம் தேதி வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகிறது.

சரஸ்வதி அவதரித்த இந்த நல்ல நாளில் முடிந்தால் கூத்தனூர் சரஸ்வதி தேவி ஆலயம் சென்று அல்லது அருகில் உள்ள கோவில்களில் உள்ள சரஸ்வதியை சென்று வணங்கலாம். இயலாதவர்கள் வீட்டில் இருந்த படி சரஸ்வதி தேவியைப் பூஜிக்கலாம்.

கல்வி கற்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சரஸ்வதி தேவியை இத்தினத்தில் வழிப்பட்டு எல்லா வளமும், கல்வி செல்வமும் பெற்று வாழ்வில் உயர்வோம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here