Home ஆன்மிகம் கடவுள் எங்கு உள்ளார்? எந்த காரியத்தால் மகிழ்கிறார்?

கடவுள் எங்கு உள்ளார்? எந்த காரியத்தால் மகிழ்கிறார்?

558
0
கடவுள் எங்கு உள்ளார்? குரு என்பவர் எப்படி இருக்க வேண்டும்?

கடவுள் எங்கு உள்ளார்? எந்த காரியத்தால் மகிழ்கிறார்? எப்படி அவரை அடைவது? கடவுளை மகிழ்விப்பது எப்படி? கடவுள் எந்த மதம்? குரு என்பவர் எப்படி இருக்க வேண்டும்?

கடவுள் எங்கே உள்ளார்?ஆன்மீக பூமி என்று கூறப்படும் அளவிற்கு நமது நாடானது ஆன்மீகத்தில் அலாதியான ஈடுபாடு மற்றும் நம்பிக்கை கொண்டு விளங்குகிறது.

இங்கு மத நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றிக்கு பஞ்சமே இல்லை. நம்பிக்கைக்கு ஏற்ப மூட நம்பிக்கைகளும் மேலோங்கி தான் உள்ளது.

மொத்தத்தில் கடவுளின் பெயரை சொல்லி பெரிய வியாபாரமே நடக்கின்றது. கோவிலுக்குச் சென்றுவிட்டு அடுத்தவர்கள் வீட்டிற்குச் சென்றால் கடவுளின் அருள் நாம் செல்பவரின் வீட்டிற்கே போய்விடும் என்ற அளவிற்கு மூட நம்பிக்கைகளில் வீழ்ந்து கிடக்கிறோம்.

தினமும் கடவுளைத்தேடி அழைகின்ற கூட்டம் சென்று சேரும் ஒரே இடம், குருமார்கள் என்று கூறி வெளிச்சாயம் பூசி ஏமாற்றும் சந்நியாசிகளிடமும், சாமியார்களிடமும் தான். உண்மையில் கடவுள் எங்கு உள்ளார்.

வாழ்வில் குருவின் முக்கியத்துவம்

கடவுள் எந்த மதம்? குரு என்பவர் எப்படி இருக்க வேண்டும்?

குரு இல்லாமல் இறை நிலையை அடைய இயலாது அது எல்லா மதத்திற்கும் பொருந்தும். குருமார்கள் என்பவர்கள் வழிகாட்டிகள். வழி தெரியாமல் தவித்து நிற்கும் ஆன்மாவிற்கு முறையான பாதையை அமைத்து நாம் சென்று சேரும் இடத்தை அடைய பாதை வகுத்தளிப்பவர்கள்.

கடலில் பயணிக்க ஓடம் இருந்தும் துடுப்பு இல்லாமல் நகரமுடியாது. அதுபோல வாழ்க்கை கடலென்றால் மதம் ஓடம் போன்றது, அதில் ஏறி பயணிக்க குரு ஒரு துடுப்பு போன்றவர் சென்று சேரும் இடமே இறைநிலை.

குரு என்பவர் எப்படி இருக்க வேண்டும்?

இன்று குருமார்கள் என்பவர்கள் எவ்வாறு உள்ளனர் என்று எண்ணிப் பார்ப்போம். பணத்தை மட்டுமே தேடி தாமே கடவுள் என்று கூறி மக்களின் செல்வத்தை எல்லாம் பறித்து நிற்கதியில் விடுபவர்களே பெரிய குருமார்கள் என்று நம்பப்படுகின்றனர். மக்களும் அவர்களையே ஏற்கின்றனர்.

சுய நலமற்ற, எந்த ஒரு பொருளின் மீதும் மோகம் இல்லாமல் நல்வழிகளை வழங்குபவர்களே சிறந்த குருவாக இருக்க முடியும். அப்படிப்பட்ட குருமார்களை தேர்வு செய்ய வேண்டும்.

ஆதிசங்கரர், இராமானுசர், இராமலிங்க வள்ளலார், இராகவேந்திரர், இராமகிருஷ்ணர், விவேகானந்தர், குருநானக் போன்ற எண்ணற்ற தன்னலமில்லா குருமார்கள் வாழ்ந்த தேசத்தில் இன்று ஆதிசங்கரரோ அல்லது சுவாமி விவேகானந்தரோ வாழ்ந்தால் கூட அவர்களை ஏற்க மறுக்கும் அளவிற்கு இன்றைய வியாபார ஆன்மீகம் பெருத்துவிட்டது என்றால் மிகையாகாது.

கண்ணால் காணும் குருமார்களுக்கே இந்த நிலையென்றால் கண்ணால் பார்த்திராத கடவுளின் நிலை அதற்கும் மேல்.

சிவனோ, விஷ்ணுவோ எதிரில் நின்று நான் தான் நீ வணங்கும் சிவன் அல்லது விஷ்ணு என்று கூறினால் கூட, எங்கே சடாமுடி, சூலம், நாகம், சக்கரம், நான்கு கரங்கள்? நீ பொய்யுரைகிறாய் நான் வணங்கும் கடவுள் நீ இல்லை என்று கூறி அவர்களை நம்ப மறுக்கும் அளவிற்க்கு மூடர்களாக நம்மை மாற்றி வைத்துள்ளனர் பல குருமார்கள்.

கடவுள் எங்கு உள்ளார்?

முதலில் நாம் வணங்கும் இறைவன் எங்கே இருக்கிறார் என்றால் கைலாயம், வைகுண்டம், சத்திய லோகம் என்பதை எல்லாம் மறக்க வேண்டும்.

பிறகு கடவுள் எங்கு உள்ளார் என்று கேட்கின்றீர்களா? இறைவன் நம்முடன் இருக்கிறார் என்பதை நம்ப வேண்டும்.

அப்படி தம்முள்ளே இருக்கும் இறைவனை கண்டவர்கள் தான், நாம் மேலே கூறிய குருமார்கள் அனைவரும். இதனை தான் சித்தர்களும், ஞானிகளும் நம்பினார்கள் இறைநிலையை அடைந்து இன்றளவும் சாகா வரத்துடன் வாழ்ந்தும் வருகிறார்கள்.

“ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறைந்த கோடியே”
சிவவாக்கியம்

இந்த பாடலின் மூலம் சிவவாக்கியர் இறைவன் எங்கே உள்ளார் என்பதை விளக்குகின்றார். நம் உள்ளிருக்கும் இறைவனை தேடி ஓடி அலைந்து கடைசி வரை காணமுடியவில்லை என்று வாடிப்போய் கோடி கணக்கான மனிதர்கள் மாண்டுபோய் விடுகின்றனர் என்று எடுத்துரைத்துள்ளார்.

இது போன்ற எண்ணற்ற நூல்கள் எடுத்துரைத்தாலும் நாம் இன்னும் நம்பாதவர்களாக குருடர்களாக தேடி அலைந்து ஈட்டிய செல்வத்தை எல்லாம் கொண்டு சேர்க்கும் ஒரே இடம் போலியான குருமார்களின் ஆஸ்ரமங்கள் மற்றும் மடங்களில் தான்.

கடவுள் எந்த மதம்?

இறைவனை மதங்கள் மூலம் பிரித்து வைத்துள்ளனர். அவர் அளாதியானவர். எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர். அவருக்கு எல்லை இல்லை.

நீ சிவம் என்றால் சிவனாவும், விஷ்ணு என்றால் விஷ்ணுவாகவும், அல்லா என்றால் அல்லா ஆவார், ஏயேசு என்றால் அவரே ஏயேசுவாகவும் உள்ளார்.

நீ எதை நம்புகிறாயோ அதுவாகவே அவர் ஆகிறார். நீ உன்னுள்ளே இருக்கும் இறைவனை காண அரம்பித்தால் வெளியில் இருக்கும் பிம்பத்தை மறந்து விடுவாய்.

பக்தி இப்பொழுது எப்படி இருகின்றது?

பக்தியும் நம்பிக்கையும் தான் அவரை காண இயலும் வழிகள் பக்தி இப்பொழுது எப்படி இருகின்றது என்றால் அதுவும் சுயநலத்துடன் தான் உள்ளது.

திருக்கோவில் பணிகளில் கூட கல்வெட்டில் பெரியதாக பெயர் வரும் என்பதற்காகவே பணத்தை செலவிடுகின்றனர் அதற்காக சண்டையும் இடுவதை பார்த்திருகின்றோம்.

40 ரூபாய் மின்விளக்கில் கூட பெயர் எழுதித்தான் வைக்கின்றனர். இதுதானா பக்தி, இதைத்தான் இறைவன் விரும்புகின்றாரா? இதுபோன்ற தற்பெருமை பக்தியில் கூடாது

மந்திரங்கள் கூறுவதாலும் பணத்தை கொட்டுவதாலும் பால் பழங்களை ஊற்றுவதாலும் பக்தியில் சிறந்தோன் என்று ஆகி விட முடியாது.

“நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே சுத்தி வந்து முண முணென்று சொல்லும் மந்திரம் ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்? சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?”
                               -சிவவாக்கியம்

இது நார்தீக ரீதியான பாடல் போல் இருக்கலாம் ஆனால் உள்ளிருக்கும் பொருளை ஆராய்ந்தால் நம்முடைய மடமை நிலை புரியும். எப்படி சமைப்பதற்காக பயன்படும் சட்டி அதனுள் உள்ள கறியின் சுவையை அறியாதோ அதுபோல தான் நாமும் உள்ளிருக்கும் இறைவனை அறிவதில்லை.

“அஹம் பிரம்மாஸ்மி” என்கிறது வேதம். அகத்தில் இருக்கும் பிரம்மத்தை புரத்தில் தேடினால் எப்படி கிடைக்கும்?.

வெறும் சமய சின்னங்களை அணிவதால் மட்டுமே பக்தியில் சிறந்தோன் ஆகிவிட முடியாது. இதில் ஒரே சமயத்தில் எத்தனை பிரிவுகள் வேறு உள்ளன. இறைவன் தன் நெற்றியில் எதை அணிந்துள்ளான் என்று கண்டிலர்.

ஆனால் ஒரே சமயத்தில் வடகலை, தென்கலை என்ற பூசல்கள் ஒருபக்கம். இதுவா இறைவனை அடையும் வழி? சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

கடவுள் மீது நம்பிக்கை வேண்டும்

சரி வெளியில் பூசிக்கும் இறை பிம்பதிற்காவது உண்மையான பக்தியை செலுத்துகிறோமா என்றால் அதுவும் இல்லை.

பசித்து அழும் ஆதரவற்ற குழந்தைகளை விடுத்து குடம் குடமாக பாலும் தேனும் கொண்டுபோய் இறை வடிவங்கள் மீது ஊற்றினால் இறைவன் மகிழ்கிறாரா?

மந்திரங்கள் கூறி பெரிய வேதவிர்பனர்களுக்கு தானங்களை வாரி வழங்கினால் இறைவன் மகிழ்கிறாரா?

இறைவனின் பெயருக்கே அர்ச்சனைகள் செய்தால் நினைத்தது நடக்கும் என்று நம்பி அர்ச்சனைகள் செய்தால் மகிழ்கிறாரா?

நீ இன்ன செய்தால் நான் இன்ன தருகிறேன் என்று இறைவனிடமே பேரம் பேசி காரியங்களை சாதிக்க நினைத்தால் மகிழ்கிறாரா?

இது தானா பக்தி? இது தானா நாம் இறைவன் மீது உள்ள நம்பிக்கை? பக்தி என்ற பெயரில் நம்மை நாமே ஏமாற்றி வருகிறோம்.

முதலில் இறைவன் நமக்கு வேண்டியவற்றை தேவையான நேரங்களில் அவரே வழங்குவார் என்ற நம்பிக்கை வேண்டும்.

இறை பக்தி எப்படி இருக்க வேண்டும்?

கடவுளை மகிழ்விப்பது எப்படி? எந்த காரியத்தால் மகிழ்கிறார்?

சைவம், வைணவம், சாக்தம் கௌமாரம், கணாதிபத்யம், சௌரம், புத்தம், சமணம் என்று எந்த சமயத்தை வேண்டுமானாலும் பின்பற்றுங்கள். ஆனால் நிலையான நம்பிக்கையும் எல்லைற்ற பக்தியால் மட்டுமே இறைவன் மகிழ்கிறார்.

தாழ்ந்த சாதி என்று ஒதுக்கி வைத்து கோவிலில் அனுமதிக்காத அந்தனர்களை தாழ் பணிய வைத்தது அல்லவா நந்தனாரின் பக்தி!

அவரின் நம்பிக்கையல்லவா தீயில் இரங்க வைத்து தீயை பூக்களாக மாற்றியது. கோவிலுக்குள் அனுமதித்து.

எவரும் இல்லாத காட்டிலே முதலை வந்து கவ்வியதும் நம்பினால் ஓடி வருவார் என்று எண்ணி ஆதி மூலமே என்றதே அந்த யானை அதல்லவா பக்தி.

ஓடியும் வந்து பக்தனை காத்தாரல்லவா அதல்லவா இறை நம்பிக்கை. யானைக்கு வேதம் தெரியுமா? மந்திரங்கள் தெரியுமா? பின்பு எப்படி அழைத்ததும் வந்தார்? அதுவே யானையின் பக்தி.

அமாவாசை என்று அறியாமல் பௌர்ணமி என்று கூறிய பட்டரின் நம்பிக்கை அல்லவா அமாவாசை இருளிலும் பௌர்ணமியாக நிலவு தோன்றியது. உயர்ந்த பக்திக்கும் நிலவு வரும் என்ற இறை நம்பிக்கைக்கும் கிடைத்த பரிசு தானே அது.

ஒன்றுமறியா அருணகிரிக்கு தூயதமிழால் அடியெடுத்து தந்து பாட வைத்தது வேல் அல்லவா? அங்கல்லவா தூய பக்தி உள்ளது. இப்படி எண்ணற்ற விளக்கங்களை கூறி் கொண்டே போகலாம்.

மூடநம்பிக்கைகளை தகர்த்தல் வேண்டும்

நம்மை படைத்தோனுக்கு நமது பெயர் என்ன? நட்சத்திரம் என்ன என்று தெரியாதா? நமக்கு என்ன தேவை என்ன தர வேண்டும் என்பது தான் தெரியாதா? பிறகு ஏன் நம் பெயருக்கு அர்ச்சனைகள். அதிலும் கடவுள் பெயருக்கே அர்ச்சனை செய்பவர் பலர்.

யாகங்கள் செய்தால் ஏழை பிராமணர்களுக்கு தானம் தரவேண்டும் என்று தான் கூறி உள்ளனர். நாம் அவ்வாறு செய்கிறோமா? அனைத்தும் உள்ளோருக்கு தானம் செய்து என்ன பயன்.

அனைத்து உயிர்களையும் படைத்தவனுக்கு வேண்டுமென்றால் எடுத்து கொள்ள தெரியாதா? அனைவருக்கும் தாய் என்கிறோம் தாயே தன் குழந்தையின் உயிரை கேட்பாளா?

பிறகு ஏன் ஆடு, மாடு, கோழிகளை பலி இடுகிறோம் இதுவா பக்தி. இறைவன் மீது நம்பிக்கை வேண்டுமே தவிர மூட நம்பிக்கையால் ஏமாற்றக் கூடாது.

இறை நிலையை அடைய வழி

கடவுளை மகிழ்விப்பது எப்படி? எந்த காரியத்தால் மகிழ்கிறார்

நீ இறைவனை நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி, அவர் தனது கடமைகளில் இருந்து மாற மாட்டார்.

உனக்கு தேவையானவற்றை உன் பாவம் மற்றும் புண்ணியங்களுக்கு ஏற்றார் போல தகுந்த நேரத்தில் செய்து கொண்டே தான் உள்ளார்.

உனக்குத் திருந்த வாய்ப்பும் வழங்கிக் கொண்டுதான் இருப்பார். அதை ஏற்று மனந்திருந்தி வாழ்வது நம் கையில் தான் உள்ளது.

“படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்” என்ற முதுமொழிக்கு ஏற்ப வாழ்கின்றனர் இன்றைய பக்திமான்கள்.

பக்தி மார்க்கம் என்பது அதீத நம்பிக்கை கலந்த பக்தி, சரணாகதி மற்றும் அனைத்து உயிர்களையும் சரி சமமாக மதிப்பதே ஆகும்.

இருப்பதை பகிர்ந்து உண்டு அன்பும் செலுத்தி உள்ளிருக்கும் இறை குணத்தை வளர்தாலே போதும் இல்லற வாழ்விலும் மேன்மை அடையலாம் என வாழ்ந்தோர் பலர்.

ஏழைகளுக்கும், உணவில்லாமல் வாடும் அனைத்து உயிரினங்களுக்கும் உதவுங்கள், உணவு வழங்குங்கள் இறைவன் மகிழ்வார்.

வஞ்சகம், போட்டி, பொறாமையை தகர்த்து எறியுங்கள். தகுதியான குருவை தேர்ந்தெடுங்கள் அவரின் மூலம் உண்மையான மெய்ப்பொருளை காணலாம். அனைவரும் இறை நிலையை அடையலாம்.

பாதை எதுவாயினும் சென்று சேரும் இடம் ஒன்றே என்ற உயர்ந்த எண்ணத்தை மனதில் விதையுங்கள். அனைவரும் இறைவனைக் காணலாம்.

Previous articleAshan Birthday Celebration: உண்மையில் இவர் தெலுங்கு பெண்ணா?
Next articleTNPSC Group 4 முறைகேடு: தோண்ட தோண்ட கிளம்பும் பூதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here